சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது. பொதுமக்கள் தவிர்த்து பல்வேறு முன்கள பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்று கொரோனா அறிகுறிகள் இருந்தது. உடனே, அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர்.
தற்போது சோதனை முடிவுகள் வந்ததையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். 400 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 25 செவிலியர்கள் மட்டுமே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.