மன்னார்குடி: கொரோனா அச்சம் காரணமாக அரசு விழாவை உயர் அதிகாரிகள் பலர் புறக்கணித்தாக தகவல் வெளியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்ட தமிழக அரசு அண்மையில் ரூ1 கோடி ஒதுக்கியது. புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்ட அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 7ம் தேதி நடந்தது. அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ (பொ) மணிவண்ணன், ஆர்டிஓ புண்ணியகோட்டி, உள்ளிக்கோட்டை சார்பதிவாளர் (பொ) மணிகண்டன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பொதுவாக அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டால், அந்த மாவட்டத்து கலெக்டர் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் கலெக்டர் ஆனந்த் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், பட்டுக்கோட்டை சார் பதிவாளர் அருள்ேஜாதி, தஞ்சை பத்திரப்பதிவுதுறை துணை தலைவர் லதா, சென்னை பத்திரப்பதிவு துணை தலைவர் ஜோதிஅருள்மணி சாமி உள்ளிட்ட சில அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை.
கொரோனா அச்சம் காரணமாகவே இந்த விழாவை உயர் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைமை செயலகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல போலீசாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு விழா உள்பட பல விழாக்களில் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாகவும், அதனடிப்பைடயில் தான் உள்ளிக்கோட்டை நிகழ்ச்சியிலும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சமூக இடைவெளியை பின்பற்றவில்லை
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் அவ்வப்போது கூறினார். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. விழா முடியும் வரை சமூக இடைவெளியை பின்பற்றாமல், நெருக்கமாகவே நின்று கொண்டிருந்தனர்.