×

தண்ணீர் தேடி வரும் மயில்களை வேட்டையாடும் கும்பல்

சாயல்குடி: சாயல்குடி மற்றும் கடலாடி பகுதியில் தண்ணீர் தேடி வரும் மயில்களை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே நரிப்பையூர், கன்னிராஜபுரம், எம்.கரிசல்குளம், பிள்ளையார்குளம். ஒப்பிலான், மாரியூர் மற்றும் கடலாடி பகுதியில் ஆப்பனூர், சாத்தங்குடி, மீனங்குடி, பள்ளனேந்தல், ஆ.புனவாசல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், வாலிநோக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளிலும், மலட்டாறு ஆறு காட்டுபகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.தற்போது இப்பகுதியில் கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி, வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் மற்றும் இரை தேடி மயில் கூட்டம், கிராம பகுதிக்குள் வருகிறது. இதனை சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து உணவில் விஷம் வைத்து கொன்று வேட்டையாடி வருகின்றனர்.

மயில் இறைச்சியிலிருந்து மயில் எண்ணை எடுப்பதற்கும், வியாபார நோக்கில் பயன்படுத்த மயில்தோகைக்காகவும், போதை ஆசாமிகளுக்கு இறைச்சிக்காகவும் மயில்கள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மேலும் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் தொடர்ந்து வருகிறது. எனவே மயில்களை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் மயில் பண்ணை அமைப்பதன் மூலம் வேட்டையாடுதல், வாகனத்தில் மோதி இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gang , gang ,peacocks, search, water
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...