பொள்ளாச்சி: கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ரயில் இயக்கம் இல்லாத நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வரையிலும் உள்ள அகல பாதையில், 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக சோதனையோட்டம் நடத்தப்பட்டது.நேற்று பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து மூன்று இணைப்பு பெட்டிகளுடன் ரயில் மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சிக்கும், அதன்பின் கோவைக்கும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
கோவையிலிருந்து இயக்கப்பட்ட ரயில் பொள்ளாச்சி வழியாக உடுமலை, பழனியை கடந்து திண்டுக்கல்லுக்கு சென்றது. ரயில் இயக்கப்பட்ட அகல பாதையில், தண்டவாளத்தின் உறுதி தண்மை மற்றும் அதிர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். மேலும், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் வருங்காலங்களில், ரயில் இயக்கம் இருக்கும்போது அதன் வேகத்தை மேலும் அதிகப்படுத்த ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.