சென்னை :சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 11 தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு படுக்கைக் கூட காலியாக இல்லை என்பது தமிழக அரசின் இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது. காட்டுத் தீப் போல பரவி வரும் கொரோனாவால் சென்னையில் நாள் தோறும் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை என்று பல்வேறு தரப்பினர் புகார் கூறி வருகின்றனர்.
இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்களை தமிழக அரசின் ஸ்டாப் கொரோனா. டிஎன் என்ற இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்ட போது, சென்னையில் பிரபல மருத்துவமனைகளான அப்போலோ, மியாட், காவேரி மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டது உறுதியாகி உள்ளது. இந்த மருத்துவமனைகள் உட்பட தமிழக அரசு வெளியிட்டுள்ள 29 மருத்துவமனைகள் பட்டியலில் 11 மருத்துவமனைகளில் அதிகம் பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐ.சி.யூ. படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மேலும் பல மருத்துவமனைகளில் 60% மேற்பட்ட படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள் நிரம்பி இருப்பதும் அரசு இணையதளத்தில் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் சென்னை மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படும் தகவல் உண்மையாகி உள்ளது.