சென்னை: மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் 8 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தற்பொழுது, அக்யூரே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஜோசுவா லெவின், பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பிரான்ஸ் வேன் கௌட்டன், சீமென்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் ஜெர்டு உறாப்னர், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டொனால்டு கேசி, காப்பியம்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லியு, ஜி ஈ ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிரென் மர்ப்பி, உறர்கோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மைக்கேல் டோவார் மற்றும் பாஸ்டன் சயன்டிபிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மைக்கேல் எப்.மகோனி ஆகிய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.