சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தடை உத்தரவை ஐந்து முறை நீடிப்பு செய்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11ம் வகுப்பு அரசுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்துக்கொள்ள ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு போக்குவரத்து துறை மூலம் 32 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்புப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 10ம் தேதி (இன்று) காலை 8 மணியளவில் சிறப்புப்பேருந்துகள் மூலம் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இப்பேருந்துகள் ஏற்கனவே அறிவித்தபடி புறப்பட்ட இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கே திரும்பி வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.