பல்லாவரம்: ஒடிசாவில் நேற்று முன்தினம் விமான விபத்தில் உயிரிழந்த பெண் விமானியின் உடல் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. அங்கு தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை, சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில், விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(29) சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விமான நகரை சேர்ந்தவர். இந்தநிலையில், விபத்தில் இறந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமாவின் உடல், சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அனீஸ் பாத்திமாவின் உடல் நேற்று இரவு 9.30 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இன்று பகல் 12.30 மணிக்கு அனீஸ் பாத்திமாவின் உடல் பல்லாவரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.