* விதிமீறினால் சிக்கல்
* 17,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்பட்ட பல்வேறு புதிய உத்திகள் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 4,450 தெருக்களுக்கு தனித் திட்டம் தயாரித்து கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெருக்கம் அதிகமாக உள்ள 1979 குடிசைப்பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 8 லட்சம் பேர் முதியோர்.
இதைத்தவிர்த்து சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள 40,000 பேரின் செல்போன் மற்றும் வீட்டு முகவரியை ஜிஐஎஸ் (ஜியோகிராப்பிக் இன்பர்மேஷன் சிஸ்டம்) முறையில் இணைத்து கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதன்படி அவர்கள் அந்த வீட்டுக்கு வெளியே வந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரியும். இதன் மூலம் வீட்டில் இருந்து வெளியே வராமல் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதைத்தவிர்த்து அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று 17,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.