சென்னை: கொரோனாவால் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக இருந்து பரோலில் சென்றவர்கள், சிறைக்கு திரும்ப இயலாத நிலை இருந்ததால், அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, பரோல் காலம் முடிந்து சிறைகளுக்கு திரும்பும் கைதிகளை தனிமைப்படுத்த தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும் கொரோனா தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. கடிதம் அனுப்பியுள்ளார். எனவே, 11 கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 8 ஆயுள் கைதிகள் உள்ளிட்ட 11 கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்து இந்த 11 கைதிகளும் ஜூன் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.