சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் திரும்பியவர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்ய பிரத்தியேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. http://tnskill.tn.gov.in என்ற பக்கத்தில் பதிவு செய்ய வேலைவாய்ப்பு பயிற்சி துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலை பெரும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தற்போது கொரோனா நோய் தொற்று உலகில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவகங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணி வாய்ப்பினை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் நேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறைகளில் பணி வாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில்( www.tnskill.tn.gov.in) வடிவமைக்கப்பட்ட இணையதள பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தொடடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.