யுடியூப் நிறுவனமானது உலகில் உள்ள பல சாதனையாளர்களின் கதைகளை அவர்களே பேசும் வகையில் “Dear Class of 2020” என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவரின் மனைவி மிச்சேல் என்று பல உலக பிரபலங்கள் இந்த வீடியோ மூலமாக தங்களது அனுபவத்தை பகிர்ந்து மற்றவர்களை ஊக்குவிக்கின்றனர். அந்த வகையில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் விதமாக பல விஷயங்களை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக குறிப்பிட்டு பேசினார்.
27 வருடங்களுக்கு முன்பு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக நான் அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார். அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டாலர்களுக்கு மேல் செலவாகும். நான் மொத்தம் பேசி முடிக்கும் தொகை, எனது தந்தையின் ஒரு மாத வருமானம். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்துள்ளேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி, தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்.
உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், இது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் எனது தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும், என கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.