×

ஆனந்த கண்ணீரில் மூழ்கிய மாணவர்கள்; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் பாஸ்....முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என்றும், 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களின் உயிரோடு விளையாடுவதா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.

டாஸ்மாக் கடையை திறப்பதுபோல அல்ல, பொதுத் தேர்வை நடத்துவது என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்று அரசு பரிசீலிக்க வேண்டும்.  பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கூடுதல் அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து ஜூன் 11ம் தேதி விசாரிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Tags : 10th Class Elections , Students at the peak of happiness; 10th Class Elections canceled; All students pass .... CM Palanisamy Action Notice
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவுள்ள...