×

கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்

பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. கோவில்கள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஏறத்தாழ 55 நாட்கள் ஊரடங்கிற்கு பின்னர் கர்நாடகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக ஊரடங்கிற்கு பின்னர் கர்நாடகத்தில் மட்டும் மாநிலத்திற்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பஸ் போக்குவரத்தும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று முதல் மேலும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி கோவில்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறக்க கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. 75 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று கோவில்கள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டன. கர்நாடகத்தில் மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி, சிருங்கேரி சாரதாம்பா, தர்மஸ்தலா மஞ்நாதர் கோவில், நஞ்சன்கூட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர், சிர்சியில் உள்ள மாரிகாம்பாதேவி, கோகர்ணா நாதேஸ்வரா உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டன.

பெங்களூருவில் புகழ்பெற்ற தொட்டபசவண்ணா, கவிகங்காதேஸ்வரா, அல்சூரில் உள்ள சோமேஸ்வரா கோவில்களும் திறக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தனிமனித விலகலை பின்பற்றி ஒவ்வொருவராக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலும் திறக்கப்பட்டது. கோவில்களை போல் கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளும் திறக்கப்பட்டன. அங்கும் பக்தர்கள் தனிமனித விலகலை பின்பற்றினர்.

கோவில்களில் எந்த பூஜையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். பூ, பழங்கள், தேங்காய் உடைக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் வணிக வளாகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டன. ஆனால் அங்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதற்கிடையே மேலும் ஒரு தளர்வாக மராட்டியம் தவிர வெளிமாநிலங்களுக்கு விரைவில் பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி கர்நாடக போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
கொரோனா ஊரடங்கால் மற்ற துறைகளைவிட போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு மாநிலத்தில் தினமும் அரசு பஸ்களில் 1 கோடி பேர் பயணம் செய்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 14 லட்சமாக குறைந்துவிட்டது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பஸ்கள் இன்று முதலே இயக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மராட்டியம் தவிர வெளிமாநிலங்களுக்கு விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். பஸ்களை இயக்க அனுமதி கேட்டு பிற மாநிலங்களுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் அனுமதி வழங்கினால், பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். கிராமப்புறங்களுக்கும் பஸ்களை இயக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். ரொட்டி, உணவுக்காக எம்.எல்.ஏ.க்களை உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்த கருத்து வேறுபாடுகளை முதல்-மந்திரி தீர்த்து வைப்பார். மேலும் கொரோனா ஊரடங்கால் அரசுக்கு வருவாய் குறைந்துவிட்டது. அதனால் தொகுதிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க முடியவில்லை. அதனால் சில எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் உள்ளனர். எந்த குறுக்கீடும் இல்லாமல் பா.ஜனதா அரசு தனது ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என லட்சுமண் சவதி கூறினார்.

Tags : regions ,Karnataka , Karnataka, curfew, outpost, bus transport, soon
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை