லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அறிவியல் ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து, 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியை சேர்ந்தவர் ஆசிரியை அனாமிகா. இவர் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரே நேரத்தில் அனாமிகா 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டப்பட்டு கடந்த 13 மாதங்களில் 1 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கியது அம்பலமாகி உள்ளது. மாதந்தோறும் ஒரு பள்ளியில் 30 ஆயிரம் ஊதியம் என்ற ரீதியில் 25 பள்ளிகளில் வேலை செய்து அனாமிகா 7.50 லட்சம் வரை சம்பளமாக பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமாக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அரசு தொடக்கக் கல்வி துறை கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அனாமிகா சுக்லா என்ற பெயரில் பணியாற்றி வந்த பிரியா சிங் என்பவர் கடந்த சனியன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 5 மாவட்டங்களில் அனாமிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம், போலி ஆவணம், மோசடி என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஸ்தூர்பா பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆசிரியர்களுக்கு மாதம் 30 ஆயிரம் சம்பளம. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் தரவு பட்டியலை தயார் செய்தபோது பல பட்டியல்களில் அனாமிகாவின் பெயர் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் எழுந்ததால் தொடக்கப்பள்ளி அதிகாரி அனாமிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகின்றது.