×

அம்பன் புயல் மீட்புப்பணியில் ஈடுபட்ட 49 என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

கட்டாக்: வங்க கடலின் தென்பகுதியில் கடந்த மே மாதம் உருவான அம்பன் புயல் வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த மே 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்காளத்தில் உள்ள டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் மேற்கு வங்காளத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் புயலால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலால் மேற்கு வங்காளத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 442 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என மேற்கு வங்காள அரசு அறிக்கை அளித்தது. இதேபோன்று 28.56 லட்சம் வீடுகள், 17 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்படைந்து உள்ளன.

மீனவ பகுதிகளில் 1.48 லட்சம் குடிசைகள் சேதமடைந்து உள்ளதுடன், 8 ஆயிரத்து 7 படகுகளும் சேதமடைந்து உள்ளன. இந்த புயலால், 2 ஆயிரத்து 148 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைகள் பாதிக்கப்பட்டும், 355 பாலங்கள் மற்றும் 10 ஆயிரத்து 91 கி.மீட்டர் நகர்ப்புற சாலைகளும் சேதமடைந்து உள்ளன. புயலுக்கு போக்குவரத்து, தீயணைப்பு, அவசரகால உட்கட்டமைப்பு, சேமிப்பு கிடங்குகள், வீடுகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய குழு ஒன்று நிலைமையை ஆய்வு செய்தது.  தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண் படையும் (என்.டி.ஆர்.எப்.) வரவழைக்கப்பட்டது.

இவர்களில் 178 வீரர்கள் தங்களது பணி முடிந்து ஒடிசாவின் கட்டாக் நகருக்கு திரும்பினர். மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உள்ள நிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : personnel ,NDRF ,veterans , Amban Storm, Rescue Mission, 49 NTRF. Player, corona infection, sure
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...