தர்மபுரி: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவுள்ள தேர்வு துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தர்மபுரி பிடமனேரி மாந்தோப்பு பகுதியை சேர்ந்த 55வயது பள்ளி கல்வித்துறை அதிகாரி, சென்னையில் தேர்வு துறை இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தக்கூடிய இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில், அவர் சென்னையில் இருந்து வந்ததால், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது. மேலும் ஒரு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளனர். பிடமனேரி- மாந்தோப்பு பகுதி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில், சீல் வைக்கப்பட்டுள்ளது.