×

சொந்த ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்; குமரியில் செங்கல் சூளை தொழில் மீண்டும் முடங்கியது: உரிமையாளர்கள் கவலை

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் உள்ளூர் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் செங்கல் சூளைகள் செயல்பட்ட ஆரம்பித்துள்ளன. குமரியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள், பஸ்கள் மூலமாக சொந்த ஊர்களுகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த வாரம் தோவாளை தாலுகாவில் இருந்து 3 அரசு பஸ்சில் சுமார் 117 வடமாநில செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்று இருக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் செங்கல் சூளை உரிமையாளர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களா ஆரல்வாய்மொழி தோவாளை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் செங்கல் சூளைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக புதிதாக அறுத்து வைத்த செங்கல்கள் அனைத்தும் மழையில் கரைந்து விட்டது.

சூளை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று உரிமையாளர்கள் சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து செங்கல்களை உருவாக்கியும் அவற்றை சுடுவதற்காக வைத்திருந்த நிலையில் மழை பெய்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் உள்ளூர், வட மாநிலங்களை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு பாதிக்கப்பட்ட செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் தொழில் செய்ய வங்கிகள் மூலமாக கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை இழந்த தொழிலாளர்கள்
சூளைகளில் 3 கட்டமாக பணி நடக்கின்றன. வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் இருந்து பச்சை செங்கலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதனால் பச்சை செங்கல் உற்பத்தி குறைந்து விட்டது. அடுத்த கட்டமாக சூளையில் கல் அடுக்குபவர்கள், செங்கல் சுடும் பணியில் ஈடுபடுபவர்கள், விற்பனைக்கு எடுத்துச்செல்லும் டிரைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவை குறைந்தது
ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே தான் கட்டுமான பணி நடக்கின்றன. இதனால் தேவை மிகவும் குறைவு என்பதால் செங்கல் விலை உயரவில்லை. இது தவிர மழை காரணமாக மூலப்பொருளான மண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விறகு விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதிகம் செலவு செய்து மூலப்பொருட்களை பயன்படுத்தி செங்கல் உற்பத்தி செய்தாலும் நஷ்டத்தில் தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Northern Territory ,home ,Owners ,Kumari ,Northwest , Northland workers, quarrying, brick kiln, industry were paralyzed
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...