ஹைதராபாத்: தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிமற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் நாடு முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலங்கானாவில் இன்று முதல் ஜூன் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட இன்டெர்னல் அஸ்ஸஸ்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.