ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ,தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சண்டையில் வீரர்களுக்கு எ்ந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கலோனல் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.
இந்நிலையில், ராணுவத்தினர் தேடி வந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகப் போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் ராணுவத்தினரும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகள் எனக் கண்டறியப்பட்ட 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் ஹிஜ்புல் முஜெஹிய்தீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
பிஞ்ஜோரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தகவல் அளித்திருந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.