சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை நிறுத்தி, அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், அரசின் அனைத்து துறைகளிலும், இந்த ஆண்டு ஏராளமானோர் ஓய்வு பெற உள்ளனர்.
அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன் அளிக்க, அதிக நிதி தேவை. மேலும், தற்போதுள்ள சூழலில் புதிய ஆட்கள் தேர்வு எப்போது நடக்கும் என்றும் கூற முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்தமே 8ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதினை உயர்த்தி உத்தரவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58-லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என பல எதிர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.