×

ஊரடங்கால் பூட்டிக்கிடக்கும் பூ மார்க்கெட் பூக்களை சாலையோரங்களில் விற்பனை செய்யும் விவசாயிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஊரடங்கு காரணமாக பூ மார்க்கெட் மூடப்பட்டு உள்ளதால், சாலையோரங்களில் நின்று பூக்களை விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் விளையும் பல்வேறு வகையான பூக்களை திருவண்ணாமலை பூ மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், திருவண்ணாமலையில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

2 மாதங்களுக்கும் மேலாக மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் திருவண்ணாமலை நகரில் சாலையோரங்களில் நின்று விற்பனை செய்து வருகின்றனர்.திருவண்ணாமலை பூ மார்க்கெட் திறக்கப்படாததால், விற்பனை குறைந்து, பூக்களை பயிரிட செய்த முதலீடு கூட திரும்ப பெற முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, திருவண்ணாமலை பூ மார்க்கெட் விரைவில் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roadside , Farmers , curtain ,flowers,roadside
× RELATED சென்னை மாநகராட்சியில் இரு சக்கரம்...