×

விட்டுவிட்டு பெய்து வரும் மழை குமரியில் டெங்கு காய்ச்சல் அபாயம்

* வீசி எறியப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களால் கொசு பரவும்  ஆபத்து

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் விட்டுவிட்டு பெய்து வரும் தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசுக்கள் உற்பத்தி பெருகியுள்ளது. இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டல்களில் உணவு பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது இல்லை. மாறாக கறி வகைகளை பார்சல் செய்ய பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்துகின்றவர்கள் அவற்றை ஆங்காங்கே சாலையோரங்களிலும், அலுவலக வளாகங்களிலும், வீடுகளின் சுற்றுப்புறங்களிலும் வீசி சென்றுவிடுகின்றனர். அவற்றில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.

இவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. நாகர்கோவில், மாநகர பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வழக்கமாக நடைபெறுகின்ற டெங்கு காய்ச்சல் களப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள பொருட்களை அகற்றுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடையவில்லை. நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு அரசு துறை அலுவலக வளாகங்களிலும், பள்ளி வளாகங்களிலும் சுகாதாரமற்ற நிலையில் மழைநீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பாக்கள் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.கடந்த காலங்களில் மாவட்டத்தின் பல இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் காணப்பட்டன. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. கேரளாவில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகம் காணப்படும். அங்கிருந்து வருகின்றவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவதுண்டு.

இந்த நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதாலும், விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாகவும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில்  வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமால் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை மழைநீர் தேங்கும் வகையில் வீடுகளை சுற்றிலும் வீசி எறிவதையும், கொட்டி வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணி தொடக்கம்

குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் போஸ்கோ ராஜா கூறியதாவது:டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தற்போது நடக்கிறது. இதற்காக ஒரு வட்டாரத்திற்கு 20 முதல் 40 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அதிக அளவு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சுகாதாரத்துறை பணியாளர்கள் இருப்பார்கள். மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பரவல் இல்லை. இருப்பினும் தற்போது மழை பெய்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் 2006ல் இருந்தே இருக்கிறது. இதற்கு தேவையான பரிசோதனை வசதிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் பரிசோதனை கூடங்களில் உள்ளது. டெங்கு காய்ச்சல் வருடம் தோறும் வருகிற ஒன்று என்பதால் இது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வாரமும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுத்தமான நீரில் முட்டையிடும் ஏடிஸ் கொசுக்கள்
* ஏடிஸ் கொசுக்கள் கருப்பு நிறத்தில், உடல் கால் பகுதிகளில் வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும்.
* இவை பகலில் மனிதர்களை கடிக்கும். அதிகாலை, மாலை வேளைகளில் அதிகம் மனிதர்களை கடிக்கும்.
* பொதுவாக சுத்தமான தூய நீரில் இது முட்டையிடும். சிறிய அளவில் இருக்கின்ற தண்ணீரே இது முட்டையிட்டு பெருக போதுமானது.
* வீடுகளை சுற்றி போடப்பட்டிருக்கும் தண்ணீர் தேங்கும் நிலையில் உள்ள கழிவு பொருட்களான டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்கள், முட்டை தோடுகள் போன்றவை இதற்கு போதுமானது.
* இதன் ஆயுள் காலம் 30 நாட்கள். சில கொசுக்கள் 60 நாட்கள் வரை உயிர் வாழும்.
* ஒரு ஏடிஸ் கொசு மூன்று நாட்களுக்கு ஒரு முறை 100 முட்டைகள் வரை இடும். * கொசு முட்டைகள் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல மாதங்கள் வரை அழியாமல் இருந்து பின்னர் அது கொசுவாக மாறும்.

Tags : Dengue Fever ,Kumari Kumari , Risk , Dengue Fever, Kumari
× RELATED கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில்...