சென்னை; 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசுக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், அறிவித்தப்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமல் உள்ளது. இதனையடுத்து தேர்வை ஜூன் 1-ம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.
இருப்பினும், கோரானா பரவல் காரணமாக ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், அன்றைய தேதி தொடங்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா காரணமாக ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, ஜூன் 15ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் துவங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான மையங்களில் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நோய்த் தோற்று எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, பாதுகாப்பான நிலை உருவான பிறகு பொதுத் தேர்வை நடத்தி கொள்ளலாம். 10-ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். மாணவர்களின் உயிரை பறிக்கும் நோய் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும், மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும். நாள்தோறும் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, குறையும் அறிகுறியே இல்லை. ஒருவருக்கு யாரிடம் இருந்து பரவியது என்ற தொடக்கநிலை தொற்று தெரியாத அளவில் தொற்று பரவி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.