×

கொரோனா ஊரடங்கால் ஆண்டிபட்டியில் ரூ.10 கோடி காட்டன் சேலைகள் தேக்கம்: சந்தைப்படுத்த அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் ஆண்டிபட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலை மற்றும் வேட்டிகள் தேக்கமடைந்துள்ளன. சேலை, வேட்டிகளை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன் உள்ளிட்ட ரகங்களில் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ண நிறத்தில் வேட்டிகள்  உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேலை, வேட்டிகள் மதுரை, விருதுநகர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோடை காலத்தில் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் இந்தாண்டு துவக்கத்திலேயே சேலைகள் அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கோடை துவங்கும் முன்பே, கொரோனா ஊரடங்கால் நெசவுக்கூடங்களும் 2 மாதங்களாக செயல்படாமல் இருந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்டும், போதுமான ஆர்டர்கள் இல்லை. இதனால் 30 சதவீத உற்பத்தியே நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் உரிய வருமானமின்றி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த நெசவாளர் சுந்தர் கூறுகையில், ‘ஒவ்வொரு விசைத்தறி கூடத்திலும் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்து உள்ளது. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடி மதிப்பிலான சேலை, வேட்டிகள் தேக்கமடைந்துள்ளன. தேக்கமடைந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : Corona ,market weavers , Corona curfew, antipatti, cotton sarees, stagnation
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!