மடகாஸ்கர்: கொரோனாவை மறக்க மாணவர்களுக்கு லாலி பாப் வாங்கித்தர திட்டமிட்ட மடகாஸ்கர் நாட்டின் அமைச்சர் ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். உலகம் முழுக்க கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆப்பிரிக்க நாடானா மடகாஸ்கர் நாட்டில் கல்வித்துறை அமைச்சர் ஒருவர் கொரோனா பாதிப்பை மறக்கடிக்க மாணவர்களுக்கு தலா மூன்று லாலி பாப் மிட்டாய்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆன்ட்ரியா. லாலி பாப் மிட்டாய்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.15 கோடி நிதியும் தன் துறை சார்பில் ஒதுக்கீடு செய்தார்.
இதற்கு அந்நாட்டில் கடும் விமர்சனங்களும், ஆட்சேபனைகளும் எழுந்த நிலையில் மடகாஸ்கர் அமைச்சரின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் கேலியும், கிண்டலும் செய்தன. இதனிடையே கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆன்ட்ரியாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா அவரது பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டார். கொரோனா காலம் மாணவர்களுக்கு கசப்பான அனுபவங்களை தந்துள்ளதாகவும், அதிலிருந்து அவர்களை மீட்பதற்காகவே லாலி பாப் கொடுக்கும் திட்டத்தை தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் ரிஜா சோவா ஆன்ட்ரியா.கல்வி துறை அமைச்சர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அந்நாட்டில் பேசும் பொருளாகி உள்ளது.