×

சென்னையில் மனைவி, மகன், மகளைத் தீவைத்து எரித்த கொடூரம்!: மதுபோதையில் புலம்பெயர் தொழிலாளி வெறிச்செயல்!

சென்னை: சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே புலம்பெயர் தொழிலாளி போதையில் மனைவி, மகன், மகளை தீவைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரவாயல் அடுத்த நூம்பல் புலியம்பேட்டை, இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே புலியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மக்பூல் அலி, இவர் மனைவி கோரோசா பேகம். மக்பூல் அலி, நான்கு ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவில் கோரோசா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன்பின் கோரோசா பேகத்துடன் அவரது முதல் கணவருக்கு பிறந்த மகன், மகளையும் அழைத்து வந்து மதுரவாயலில் குடியிருந்து வந்தனர். கணவன், மனைவி, மகள் ஆகிய மூவரும், வேலப்பன் சாவடியில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தனர். ஊரடங்கால் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அடிக்கடி குடித்துவிட்டு வந்த மக்பூல் அலி, மனைவி மீது சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோரோசா பேகம் அவரை கடந்த 2மாதங்களாக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த மக்பூல் அலி நேற்று இரவு அளவுக்கடந்த போதையில் வீட்டிற்குள் வர முயன்றுள்ளார். ஆனால் அவரை அனுமதிக்க மறுத்து மனைவி கோரேசா பேகம் கதவை அடைத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்பூல் அலி, ஜன்னல் வழியாக டர்பண்டைன் ஆயிலை ஊற்றி மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கோரேசா பேகம் மற்றும் குழந்தைகளை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடி வரும் மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மக்பூல் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Chennai , Chennai, wife, son, daughter, fire, alcoholic, migrant worker, maniac
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...