சென்னை: தமிழகத்தில் ஓட்டல்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் ஓட்டல்கள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஓட்டல்கள் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவிவைத்து வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும். கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏ.சி.பயன்படுத்தக்கூடாது. ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும். கழிவறைகளை தினமும் 5 முறை கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
ஒரு மேஜைக்கும் மற்றோரு மேஜைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி வேண்டும். பண பரிவர்த்தனையை தவிர்த்து கூடுமான வரை இணையவழியில் பணம் செலுத்தலாம்.
ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கை உறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல் நிலை சரியில்ல்லாத ஊழியர்களை பணி அமர்த்தக்கூடாது. காய்கறிகளை நன்கு சுத்தபடுத்தி சமைக்க வேண்டும். உணவை தயார் செய்யும் ஊழியர்கள் ஆபரணங்கள், கை கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வேறு உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள் உணவகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், உடல்நிலை கோளாறு உள்ள ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம். சமைக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு குறைந்த வாடிக்கையாளர்கள் கூடுமான வரை உணவகங்களுக்கு வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.