×

தனது எல்லையில் நுழைந்த இந்திய உளவு ஹெலிகாப்டரை சுட்டு தள்ளியதாம் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இந்திய உளவு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் நேற்று வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவின் உளவு ஹெலிகாப்டர் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 500 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்தது.  இந்தாண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள இந்தியாவின் 8வது உளவு ஹெலிகாப்டர் இதுவாகும்.

கடந்த மாதம், இதே போன்று எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை கடந்து பாகிஸ்தான் எல்லைக்கு வந்த இரண்டு இந்திய உளவு ஹெலிகாப்டர்கள் மே 27, 29 ஆகிய தேதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய உளவு ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக இதற்கு முன்பு  பாகிஸ்தான் பலமுறை கூறியுள்ளது. ஆனால், அவற்றை இந்தியா ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

மீண்டும் அத்துமீறல்
ஜம்மு  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகமாகி இருக்கிறது. கதுவா மாவட்டத்தில்  உள்ள ஹிராநகர் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்றும் அது துப்பாக்கிச்சூடு  நடத்தியது. கரோல் பகுதி எல்லையில் காலை 10.50 மணிக்கு ஊடுருவிய பாகிஸ்தான்  வீரர்கள், துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதற்கு இந்திய வீரர்கள்  பதிலடி கொடுத்ததும், அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.



Tags : Pakistan ,Indian , Indian intelligence helicopter, Pakistan
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி