திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 200 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் வழிபாட்டு தலங்களில் வரும் 9ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முக்கிய கோயில்களான சபரிமலை மற்றும் குருவாயூரில் மேலும் கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்படும். ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் ேகாயில் நடை 14ம் தேதி மாலை திறக்கப்படும். 19ம் தேதிவரை ஆனி மாத பூஜைகள் நடக்கும்.
பின்னர் 10 நாட்கள் நடக்கும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். இதனால், 28ம் தேதிவரை ேகாயில் நடை திறந்திருக்கும். இந்த முறை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். முன்பதிவு செய்யாமல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கு 200 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை முன்பதிவு செய்யும்போது அளிக்க வேண்டும். மேலும் கேரளாவிற்குள் நுழைய இ-பாஸ் வாங்க வேண்டும்.
குருவாயூர் கோயிலிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் வீதம், மொத்தம் 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தினமும் 60 திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
* சபரிமலையில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.
* 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதை தாண்டியவர்களுக்கு அனுமதியில்லை.
* விஐபி தரிசனம் கிடையாது.
* சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டதும் மலை இறங்க வேண்டும்.
* கேரள அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் பம்பை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
* ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அப்பம், அரவணை வழங்கப்படும். கவுண்டர் விற்பனை கிடையாது.
* வண்டி ெபரியாறு வழியாக பக்தர்கள் வர அனுமதியில்லை.