சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.
இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழக அரசு, மக்கள் நலன் கருதி கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்காக பொது வார்டில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு கிரேடு ஏ1, ஏ2க்கு நாள் ஒன்றுக்கு ரூ.7,500, கிரேடு ஏ3, ஏ4க்கு ரூ.5000, தீவிர சிகிச்சை பிரிவில் கிரேடு ஏ1, ஏ2க்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000, கிரேடு ஏ3, ஏ4க்கு ரூ.15,000 அதிகப்பட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. இவ்வாறு அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளது.