×

எல்லாம் ‘தண்ணி’ படுத்தும் பாடு குடத்தோடு சுற்றும் பெண்கள்ஊறுகாயோடு அலையும் ஆண்கள்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் காலிக் குடங்களுடனும், ஆண்கள் ஊறுகாயுடனும் தண்ணீருக்காக தினமும் அலைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பல ஏரிகள் உடைந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதற்கு முக்கிய காரணம் நீரோடைகள் அனைத்தும் குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான். கடந்த 2016ம் ஆண்டு முதல் மிகவும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகள் வறண்டு போக தொடங்கின. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் போதுமான குடிநீரின்றி கடும் வறட்சியில் அவதிப்பட்டு வருகின்றனர். நீர் நிலைகளும் வறண்டு விட்டதால் அதிலிருந்து தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி போராடி வந்த ஏழை மக்கள் தற்போது தண்ணீருக்காக தவியாய் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் உள்ள மக்கள், தண்ணீர் பிரச்னையை தீர்க்காமல் உள்ளதாக அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்கி கட்டுப்படி ஆகாததால் மக்கள் காலிக் குடங்களுடன் தெரு தெருவாக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் முடிந்தும் இந்த நிலை உள்ளதால் என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலேயே எலைட் எனப்படும் மதுபான கடைகள் உள்ளது.

அதோடு நெடுஞ்சாலையை ஒட்டி 500 மீட்டர் தள்ளி ஏராளமான மதுபான கடைகள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு, பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மதுபானக் கடைகளைத் தேடி குடிமகன்கள் ஊறுகாய் பொட்டலங்களுடன் அலைந்து வருகின்றனர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் காலிக் குடங்களுடன் பெண்களும், ஊறுகாயுடன் ஆண்களும் அலைந்து வருவது தண்ணீரை தேடித்தான்.



Tags : women ,men ,pitchers , Women, men, Thiruvallur District, water
× RELATED பரங்கிமலை மையத்தில் இளம் ராணுவ...