டெல்லி: படுக்கைகள் காலியாக உள்ளதை மறைத்து கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் எச்சரித்துள்ளார். புதுடெல்லியில் கடந்த ஒரு வார காலமாகவே கிருமித்தொற்று மிக அதிகமாகக் கூடி வருகிறது. இதுவரையில் அங்கு 23,645 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 9,500 பேருக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு முன் நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. டெல்லியில் நாள் ஒன்றுக்குக் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 500 முதல் 800 பேராக இருந்தது.
இந்நிலையில் காணொலியில் பேசிய கேஜ்ரிவால், ஒருசில மருத்துவமனைகள் படுக்கைகள் காலியாக இல்லை எனக் கூறி கொரோனா நோயாளிகளைச் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பதாகப் புகார் வந்துள்ளதாகத் தெரிவித்தார். படுக்கைகள் காலியாக இருப்பதை மறைத்து, அதிகக் கட்டணம் தருவோரை அனுமதிக்கும் இந்தத் தவறான முறைக்குச் சில நாட்களில் முடிவு கட்டப்படும் எனத் தெரிவித்தார். பிற கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடும் மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்தார். மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கான செயலியைச் செவ்வாயன்று டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.