×

கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரபு. இவர், கடந்த வருடம், ஆகஸ்ட் மாதம், 21ம் தேதி அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம், அஜித், திவாகர் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, இந்த 3 பேரும் சேர்ந்து பிரபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரபு ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம், அஜித், திவாகர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இவர்கள் மூவரையும் பிரபுவின் நண்பர் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஷாஜகான் (23) என்பவர்  மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சண்முகம் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். சில நாட்களில் இவர் சிறையில் இருந்து வேளியே வந்தார். இந்நிலையில், நேற்று காலை ஷாஜகான் வில்லிவாக்கம் பகுதியில் நடந்து சென்றபோது, முகமூடி அணிந்து வந்த கும்பல், அவரை மறித்து அரிவாளால் வெட்ட தொடங்கினர்.சுதாரித்துக்கொண்ட ஷாஜகான் அலறி கூச்சலிட்டபடி, அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் மர்ம கும்பல், நடுரோட்டில் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஷாஜகான் இறந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சண்முகம் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பதால் இவர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ஷாஜகான் மீது ஐசிஎப், வில்லிவாக்கம், ராஜமங்கலம் ஆகிய காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Cricketer ,teenagers , Prejudice ,cricket, midair
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...