லூதியானா: ஊரடங்கு காலத்திலும் ரகசியமாக திறக்கப்பட்ட ஆரம்ப பள்ளியில், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டதையடுத்து அப்பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டோமோ என்ற ஐயம் எழும் நிலையில், அரசு அனைத்து விதமான தளர்வுகளையும் மேற்கொண்டு முன்னெச்சரிக்கைகளைத் தவிர்த்து வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் பள்ளிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ஹைபோவால் பகுதியில் உள்ள பள்ளி ஒன்று, மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தியுள்ளது.
இதையடுத்து, அப்பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் அன்லாக்-1 என்று அழைக்கப்பட்டு படிப்படியாகவே அமலாகவுள்ளது. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இதுதொடர்பாக பள்ளிகள், பெற்றோர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும், எப்படியும் 10ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பள்ளிகளைத் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.