சென்னை : தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 10 அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனையில் வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெற்ற பின்பே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வருபவர்களிடம் முறையான தகவல் பெறுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் தொடர்புகளை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம்் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியார் மருத்துவமனையில் சோதனைக்கு வரும் நபர்களின் ஆதார் எண், செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்டவற்றை பெற்று,சரிபார்த்த பின்னரே சோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆதார் எண் இல்லாத நபர்களை சோதனைக்கு உட்படுத்தினால், சோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். தனியார் ஆய்வகங்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்புகளை சரியாக கண்டறியாததால் அந்த நபர்களால் மூலம் கொரோனா அதிகமாக பரவுகிறது.இதைத் தடுக்க, அனைத்து ஆய்வகங்களும் சோதனைக்கு வருவோரின் முழு தகவலையும் பெற்று பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.