சென்னை: வளைகுடா நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் பலர், கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல் வளைகுடா நாடுகளில் சிக்கி தவித்தனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்படி சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டனர். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரேபியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சவுதி அரசு தங்கள் நாட்டு விமானத்தில் இந்தியர்களை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தது.
அதே நேரத்தில் தங்கள் நாட்டு விமானத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று கூறியது. இந்திய அரசும் அதற்கு அனுமதியளித்தது. தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள தமாமிலிருந்து கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் 169 இந்தியர்கள் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தனர்.