நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்மநபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த வாரம் மினசோட்டா மாநிலம் மினியாபோலிஸில், கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவரை காவல் அதிகாரி ஒருவர் கழுத்தில் மிதித்து கொன்றுவிட்டார். இதுதொடர்பான காணொளி வெளியாகி அமெரிக்கா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 8வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க் மாநிலம் புரூக்ளின் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அம்மாநில போலீசார், கையில் துப்பாக்கி ஏந்தியபடி ஒருவர் பதுங்கியிருந்தார். ஆயுதத்தை கீழே போடுமாறு காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மர்மநபர் மீது குண்டு பாய்ந்தது. அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளோம். அந்த மர்ம நபர் உயிரிழந்துவிட்டார், எனக்கூறியுள்ளனர். இதனிடையே பல்வேறு நகரங்களில் கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடுவதும் அதிகரித்து வருகிறது. பல்பொருள் அங்காடிகளில் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் சுருட்டி செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸங நகரங்களில் அதிகளவு மோதல்கள் நடைபெற்றாலும், போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நட்பு பாராட்டி வருகின்றனர். இளைஞர்களை தடுத்து ஆறுதல்படுத்தும் காவலர்கள், அவர்களுடன் சேர்ந்து பிராத்தனையிலும் ஈடுபடுவதால் போராட்டங்கள் மெள்ள குறையத் தொடங்கி வருகிறது.