×

வருசநாடு அருகே தார்ச்சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் முத்துநகர் ஐந்தரைப்புலி முத்துராஜபுரம் கோடாலியூத்து, அண்ணாநகர், வீரசின்னம்மாள்புரம், வண்டியூர், தண்டியகுளம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு கடந்த மூன்று தலைமுறையாக தார்ச்சாலை வசதி இல்லாமல் கிராம பொதுமக்கள் விவசாய பொருட்களை தலைச்சுமையாக சுமந்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாய பொருட்களான இலவம்பஞ்சு, கொட்டைமுந்தரி, பீன்ஸ், அவரை, எலுமிச்சை உள்ளிட்ட விவசாய பொருட்களை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய பொருட்களை மாட்டு வண்டி மற்றும் தலைச்சுமையாக தும்மக்குண்டு கிராமத்திற்கு கொண்டுவர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் விவசாயிகளுக்கு பலத்த சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் விவசாய பொருட்களை கொண்டு செல்லும்போது காலதாமதமும் ஏற்படுகிறது. இதனால் சந்தையில் பொருட்கள் விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது இதுகுறித்து சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் சில மலைக்கிராமங்களில் மண் சாலைகள் அதிகளவில் உள்ளது. தார்ச்சாலை சம்பந்தமாக பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக தேனி கலெக்டரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : Public ,Varshanadu , Public , availing tarpaulin,Varshanadu
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...