×

வரதட்சணை கொடுமையால் விபரீதம்: 2வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் கால்கள் முறிந்தது

அண்ணாநகர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (30). இவருக்கும், சென்னை மதுரவாயல், வாழைத்தோப்பு, அய்யாவு நகரை சேர்ந்த விக்னி நாக நந்தினி (26) என்பவருக்கும் கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது, பெண் வீட்டார் நகை, சீர்வரிசை கொடுத்துள்ளனர். மேலும் மாப்பிள்ளைக்கு 5 சவரன் நகை போடுவதாக கூறியுள்ளனர். ஆனால், சொன்னபடி நகை போடவில்லை என கூறப்படுகிறது. இதனால், நாக நந்தினியை கணவன் செந்தில்நாதன் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. நாக நந்தினி கோபித்துக் கொண்டு மதுரவாயலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

மனைவிக்கு போன் செய்த செந்தில்நாதன், ‘பெற்றோர் வீட்டில் இருந்து நகை வாங்கி வராவிட்டால், அங்கேயே இருந்துகொள். நான் 2வது திருமணம் செய்துகொள்ள போகிறேன்,’ என கூறியுள்ளார். மனமுடைந்த நாக நந்தினி, நேற்று முன்தினம் வீட்டின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவரது பல் உடைந்து உதடு கிழிந்தது. மேலும், இரண்டு கால்களும் உடைந்தன. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், நாக நந்தினியை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் செந்தில்நாதன், மாமியார் வசந்தகுமாரி, நாத்தனார் சீதாலட்சுமி ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர் என நாக நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி தலைமையிலான போலீசார் பண்ருட்டி சென்றனர். அங்கு 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானது தெரிந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.


Tags : Teenagers , Dowry harassment, Young woman
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு