×

ஆப்பிள் மாலை, மேளதாளம் என தாம்தூம் ஊரடங்கு விதிமுறையை மீறி ஊர்வலம் போன அமைச்சர்: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் சீற்றம்

சித்ரதுர்கா: கர்நாடக அமைச்சர் ராமுலு, ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மக்களுடன் பிரமாண்ட ஊர்வலம் நடத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 5ம் கட்டமாக கொரோனா ஊரடங்கை நீடித்திருந்தாலும், மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்காமல் இருக்க சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமூக இடைவெளி பின்பற்றுதல், கூட்டம் கூடக் கூடாது, கட்டாயம்  மாஸ்க் அணிய வேண்டும் போன்றவை அமலில் உள்ளன. இந்நிலையில், இம்மாநில மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் ராமுலு, நேற்று  சித்ரதுர்கா மாவட்டம், செல்லகேரே தாலுகா, பரசுராம்புரம் பகுதியில் உள்ள  வேதவதி நதியில் சர்ப்பண பூஜை செய்ய வந்தார். அவரை ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள், ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பிரமாண்ட ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் அணிவித்தனர்.  வழியெங்கும் மலர் தூவினர்.  வாத்திய இசை முழக்கத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதில், கொரோனா ஊரடங்கு விதிமுறை 100 சதவீதம் மீறப்பட்டது.  ஊர்வலத்தில் பங்கேற்ற யாரும் மாஸ்க் அணியவில்லை, சமூக இடைவேளி  பின்பற்றவில்லை.  மாநில அமைச்சரே ஊரடங்கு விதிமுறை மீறிலாமா?’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

நிகழ்ச்சிகள் ரத்து
ஊரடங்கை மீறி ஊர்வலம் நடத்திய செய்திகள் மீடியாக்களில் வெளியானதால் மூட் அவுட்டான அமைச்சர் ராமுலு, ஏற்கனவே  திட்டமிட்டிருந்த மூன்று நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, அவசரமாக பெங்களூரு திரும்பினார். ‘தொண்டர்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த  முடியாமல் போனது’ என இதற்கு டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Tags : Opposition minister ,Karnataka ,Apple , Apple Evening, Melatal, Thamdum, Curfew, Minister,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!