சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என்பதால், தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி வடக்கு திசையில் நகரும். இதனால் லட்சத்தீவு கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கர்நாடக மற்றும் கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்த கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நாளை (4ம் தேதி) வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. “நிஷர்கா” புயலாக மாறி நேற்று முதல் மகாராஷ்ட்ரா மற்றம் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 17 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.