சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சன் டிவி நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது கொரோனா. வாழ்வாதாரங்களை இழந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்கள் உண்ண உணவின்றி, எதிர்காலம் குறித்த அச்சத்தில் நிலைகுலைந்து போயுள்ளனர். கொரோனாவின் கோரப்பிடியில் வாழ்க்கையை இழந்து தவித்து வரும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உங்கள் சன் டி.வி.யும் களத்தில் இறங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளியோர், சுகாதாரப் பணியாளர், ஆதரவற்றோர், குடிசைப் பகுதிகளில் வசிப்போர், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஆட்டோ ஓட்டுநர்கள் என பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களுக்கும் சன் டி.வி. தொடர்ந்து உதவிகளை அளித்து வருகிறது. இந்த உதவிகள் மூலம் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைந்துள்ளனர்.
திரைத்துறை, சின்னத்திரை படப்பிடிப்புகள் நின்றுபோனதால், அந்த துறைகளைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுடைய பசியாற்றவும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் களத்தில் இறங்கியது சன் டிவி. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது சன் டிவி. நலிவடைந்த மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதி உதவி அளித்து வருகின்றன. சென்னை பெருவெள்ளத்தின்போது துயரத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி, அவர்களின் தேவையை நிறைவேற்றிய உங்கள் சன் டிவி, இப்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் துயர் நீக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இந்த உதவிகளின் மூலம் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர்.