வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. கடைகளில் வாடிக்கையாளர்கள் 5 பேர் ஒன்றாக இருக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள டீக்கடைகளில் டீ குடிக்க மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பேக்கரி கடையுடன் செயல்படும் டீ கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரப்படி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் இன்று காலை பழைய பஸ் நிலையம், காட்பாடி-வேலூர் சாலை,
ஆற்காடு சாலை, மண்டிவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது காட்பாடி-வேலூர் சாலையில் உள்ள டீ கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், காலி டீ கப்களை வெளியே வீசிவிட்டும் பலர் சென்றுள்ளனர். அங்கிருந்தவர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும், கடையின் முன்பு பொதுமக்கள் கூடியிருந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். முதல்முறை என்பதால் ₹100 அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்தமுறை விதிமீறினால் சீல் வைக்கப்படும் என்று உதவி கமிஷனர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்தார்.