சிவகங்கை: ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிப்போன சிறுவர்கள் இணையத்தள விளையாட்டுகள், ஆன் லைன் வகுப்புகள் என தொடர்நது மொபைல் போன் பார்ப்பதால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவையொட்டி குறிப்பிட்ட நேரம் மட்டும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. லைகளில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி சரியான காரணம் கூறினால் மட்டுமே அவர்கள் தொடர்நது வாகன பயணம் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், பொது இடங்களில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். ஊரடங்கு அறிவித்த நாள் முதல் நகரம் மட்டுமின்றி கிராமங்களும் விதிமுறைகளைக் கடைபிடித்து முடங்கி கிடக்கிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் மைதானங்களில் விளையாடுவதும் தடை செய்யப்பட்டதால் மரத்தடியிலும், சவுக்கைகளிலும், வீடுகளுக்குள்ளும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆரோக்கியமான விளையாட்டுகளை தவிர்த்து மொபைல் போனில் இணைய விளையாட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் மூழ்கியுள்ளனர். மேலும் ஏராளமான தனியார் பள்ளிகள் மொபைல் போன் வழியே பல மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் எடுக்கப்படுகிறது. இவைகளுக்கு மொபைல் போன்களே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நாள் முழுவதும் பல மணி நேரம் மொபைல் போன்களை கூர்மையாக பார்த்து சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இணைய விளையாட்டுகள் சிறுவர்கள், இளைஞர்களை ஈர்த்து நிரந்தரமாக அவர்களை அடிமையாக்குகிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்தவர்கள் தற்போது முழுமையாக நாள் முழுவதும் அதிலேயே மூழ்கியுள்ளனர்.
சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மொபைல் போனை நீண்ட நேரம் பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக்குறைவும், மனதளவில் பாதிப்பும் ஏற்படும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. தற்போது ஊரடங்கை பயன்படுத்தி இது போன்ற இணையத்தள விளையாட்டுகள் கிராமங்களிலும் அதிகப்படியாக ஊடுருவி விட்டது. பள்ளிகளில் நேரடியாக வகுப்பு எடுப்பது போல் காலை, மதியம் என இரு வேளைகளிலும் பல மணி நேரம் மொபைல் போன் வழி ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது ஆபத்தான ஒன்று. இதனால் மாணவர்களுக்கு நன்மையைவிட தீமையே அதிகம். இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என்றார்.