மேட்டுப்பாளையம்: வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை பெரியநாயக்கன்பாளையம் துடியலூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புதர் காடுகளில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வனப்பகுதிக்குள் ஊடுருவி முயல், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, கோவை வனக் கோட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதனால், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 30க்கும் மேற்பட்ட வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை பகுதியில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அதன்பின், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் வறட்சி காலம் என்பதால் வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் போதிய தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லாத இடங்களில் லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. சில இடங்களில் போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை நீர்நிலைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அசைவ உணவுகள் விலை உயர்வு காரணமாக தட்டுப்பாடு நிலவுவதால் வனப்பகுதியில் சிறு விலங்குகளை வேட்டையாடுவதாக எந்த புகாரை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதியில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.