சென்னை: கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகாது குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா சென்று ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி தவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் நாடு திரும்பினார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுனில் அரோரா இன்னும் சில நாட்களில் அலுவலகம் வந்து பணிகளை தொடங்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் முதல் தமிழக தேர்தல் தலைமை அதிகாரிகள் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.