திருவள்ளூர்: புதிய தொழில் முனைவோர் நீட்ஸ் திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) என்ற கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ இவைகளில் ஏதேனுமொன்றில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் நாளில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 45 வயதுக்குட்பட்டவராகவும், பொது பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். முதல் தலைமுறை தொழில் முனைவோராயிருப்பது அவசியம்.
₹10 லட்சத்துக்கு குறையாமலும், ₹5 கோடிக்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ₹30 லட்சத்தை உள்ளடக்கிய ₹25 சதவீதம் மானியமும், வங்கியினரிடமிருந்து பெற்ற கடனுக்கென செலுத்தப்படும் வட்டித்தொகையில் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டு 2020-21ல், 44 நபர்களுக்கு ₹431 லட்சம் மானியம் வழங்க திருவள்ளுர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்கள் பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காக்களுர், திருவள்ளுர் - 602003 என்ற அலுவலகத்தை, 044-27666787, 9788877322 என்ற தொலைபேசிகள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.