×

வைப்பூர் ஊராட்சியில் நிதி முறைகேடு

* பொதுமக்கள் குற்றச்சாட்டு
* அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என புகார்

ஸ்ரீபெரும்புதூர்:  வைப்பூர் ஊராட்சியில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் புகார் கூறுகின்றனர். குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சியில், வைப்பூர், காரணிதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளேரிதாங்கல், கூழங்கல்சேரி ஆகிய கிராமங்கள் அடங்கி உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ஊராட்சியில் கார், லாரி உள்ளிட்ட வாகங்களின் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதனால் இந்த ஊராட்சிக்கு ஆண்டிற்கு கோடி கணக்கில் வருவாய் கிடைக்கிறது.  மேலும் சென்னைக்கு அருகாமையில் இந்த ஊராட்சி அமைந்துள்ளது. இதனால் இந்த ஊராட்சியில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டுமனைகள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல லட்சம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த நிதி மூலம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைப்பூர் ஊராட்சியில் பல லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களின் சார்பில் அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுக்கபட்டுள்ளது. ஆனால் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 குன்றத்தூர் ஒன்றியத்தில் அதிக வருவாய் கிடைக்கும் ஊராட்சிகளில் வைப்பூர் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மின் விளக்கு அமைத்ததாகவும், மின் சாதன பராமரிப்பு,  குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ததாக பல லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் மின் விளக்கு அமைத்தல் பராமரிப்பு என பல லட்சங்கள் சுருட்டி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கையூட்டு பெற்றுகொண்டு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.  எனவே மாவட் ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் வைப்பூர் ஊராட்சியில் தணிக்கை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

முறையான பதிவேடு இல்லை
குன்றத்தூர் ஒன்றியத்தில் வருவாய் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. ஊராட்சி நிதி குறித்த வரவு, செலவு குறித்த தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒருசில செலவினங்களுக்கு முறையாக பதிவேடு வைக்கப்படாமல் உள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் இருக்க தணிக்கை செய்யும் அதிகாரிக்கு 10 சதவீதம் கமிஷன் தொகையினை வழங்கி ஊராட்சி செயலர்கள் சரிகட்டி வருகின்றனர். இதேபோல் வைப்பூர் ஊராட்சியில் தணிக்கை செய்த அதிகாரிக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  



Tags : Vaipur , Financial malpractice , Vaipur panchayat
× RELATED மின்கம்பி மீது உரசி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி