சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் இணையவழி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சூம் செயலி மூலம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அவரவர் வீட்டு வாசலில் நின்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது திருமாவளவன் பேசியதாவது:
கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இதுவரை இந்தியா கண்டிராத பேரவலமாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை எழுந்துள்ளது.
இருமாத கால முழுஅடைப்பால் பட்டினிகிடக்கும் நிலையில்,போக்குவரத்தும் முடங்கிப்போன சூழலில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிமீ தூரம் நடந்தே செல்லும் வெங்கொடுமை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அத்துடன், தமிழகத்திலுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.